Tuesday, October 27, 2009

ஒரு இரயில் பயணத்தில்....

சமீபத்தில் படித்த ஆங்கில சிறுகதை…நீங்களும் அதை ரசிப்பதற்கு இங்கு தமிழ்படுத்தியுள்ளேன்…

வயதான முதியவர் தன் 25 வயது வாலிப பையனை அழைத்துக்கொண்டு இரயிலில் பிரயாணம் செய்வதற்கு ஏறி அமருகிறார்.

இரயில் புறப்பட்டது

இவர்களின் இருக்கைக்கு எதிரில் இளம் தம்பதியினர் வந்தமர்ந்தார்கள்.

அந்த வாலிபர் தன் வயதான தந்தையிடம்
“அப்பா…அப்பா…ஜன்னல் பக்கம் நான் உட்காந்துக்கிறேனே”… என்று கேட்க அவரும் ‘சரிப்பா… வா உட்கார்’ என்று தன்னை நகர்த்திக் கொண்டார்.

இரயில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது

அந்த வாலிபர் ஒரு கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிப்பார்த்தார். காற்று அவருடைய கையில் பட்டு பின்னுக்கு தள்ளின.
இவர் பார்த்த மரங்கள் செடிகள் அனைத்தும் இரயிலின் ஒட்டத்தில் பின்னுக்கு சென்றன.

அந்த வாலிபனுக்கு ஆச்சரியமும் சந்தோசமுமாக இருந்தது. உடனே தன் தந்தையிடம்
“அப்பா…அப்பா…இங்கபாருங்க எல்லாமே பின்னாடி போகுது”…என்றான்.
வயதான தந்தை தன் மகனின் சந்தோசத்தைக் கண்டு புன்முறுவல் பூத்தார்.

அந்த வாலிபனின் செயல்களை எதிரில் அமர்ந்திருந்த தம்பதியினர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
25 வயது வாலிபன் சின்னபிள்ளைமாதிரி நடந்துக்கிறானே… பாவம் மனோநிலை சரியில்லாதவன்போல் தெரிகிறான் என்று எண்ணிக்கொண்டார்கள்.

கொஞ்சதூரம் சென்றப்பின் மீண்டும் அந்த வாலிபன் தன் தந்தையிடம்

“அப்பா…அப்பா…அங்கப்பாருங்க அதுதானேமேகம் .? இருட்டிக்கிட்டு நமக்கு பின்னாடி போகுதே” என்றான்.

அதற்கும் அந்தமுதியவர் புன்முறுவல் ப+த்தார்.

சற்று நேரம் அமைதியாக பெரிய நிபுணர்போல் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது மழைத்தூறு ஆரம்பித்தது… தன் தந்தையிடம்

“அப்பா… அப்பா…இதுதான் மழையாப்பா… என்னைத் தொடுதுப்பா”…என்று ஜன்னலில் தலைநீட்டி கண்களை மூடிக் கொண்டு நனைந்தான்…அவனுக்கு சந்தோசம் அதிகரித்தது.

அந்த வாலிபனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தம்பதியினர் அந்த முதியவரிடம்

‘உங்க பையனை நல்ல ஆஸ்பத்திரியில காண்பிக்கலாமே’.? என்றார்கள்

அதற்கு அந்த முதியவர்

“ஆஸ்பத்திரியிலிருந்துதான் வருகிறோம்.இன்றைக்கு தான் என்பையனுக்கு கண் கிடைத்திருக்கிறது உலகத்தை இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறான்” என்றார்.

2 comments:

Followers